இணை இயக்குநருடன் நடிகை ஆனந்தி திடீர் திருமணம்

By செய்திப்பிரிவு

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு இணை இயக்குநர் ஒருவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்தப் படத்துக்குப் பிறகு பலரும் 'கயல்' ஆனந்தி என்றே அவரை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து 'சண்டி வீரன்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'விசாரணை', 'ரூபாய்', 'என் ஆளோட செருப்பக் காணோம்', 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் தான் நாயகியாக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் ரக்‌ஷிதா. தமிழுக்காக ஆனந்தி என்று பெயர் மாற்றினார். தமிழில் 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ஏஞ்சல்', 'இராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனந்தி.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 7 ) இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத கேமரா' படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் இரு வீட்டாரின் சம்மதம் பெற்று இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது,

மேலும் வரும் பிப். 1 அன்று அனைத்து திரையுலக நண்பர்களையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE