திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது: அரவிந்த் சாமி

By செய்திப்பிரிவு

திரையரங்குகளில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி எனச் சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், நேற்று (ஜனவரி 4) இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் 'மாஸ்டர்' மற்றும் 'ஈஸ்வரன்' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், தயாரிப்பாளர் சங்கம், முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் எதிர்வினைகளை உருவாக்கும் என்றும், நாம் இன்னும் கரோனாவின் பிடியிலிருந்து வெளியே வரவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட சிலரோ, அரசியல் பொதுக்கூட்டங்களில் எல்லாம் மக்கள் கூடுகிறார்களே. அது எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆகையால், தமிழக அரசின் இந்த அறிவிப்பு என்பது எதிர்ப்பு, வரவேற்பு என இரண்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதிக்கு நடிகர் அரவிந்த் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறுகையில், "100 சதவீதத்தை விட 50 சதவீதம் மிகவும் சிறந்தது என்ற காலம் உண்டு. அதில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE