இந்தி வெப் தொடர்: ஷாகிக் கபூர், விஜய் சேதுபதியுடன் நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

ஷாகிக் கபூர், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இந்தி வெப் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

ஓடிடி தளங்களில் பல்வேறு படங்கள் வெளியாகி வருகின்றன. அதே வேளையில், ஓடிடி தளங்களுக்கென்று பிரத்யேக வெப் தொடர்களும் உருவாக்கப்பட்டு வெளியாகி வருகின்றன. இந்த வெப் தொடர்களில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி பேமிலி மேன்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியிருந்த இந்த வெப் தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இதன் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான இந்தி வெப் தொடர் ஒன்றை இயக்க ராஜ் மற்றும் டிகே ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முதல் வெப் தொடராக இது அமைந்துள்ளது. தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷாகித் கபூர் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு, கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரை இதர மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE