மீண்டும் திரையரங்குகளில் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகியுள்ளது தொடர்பாக கார்த்தி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. ரவீந்திரன் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவினாலும், இப்போது வரை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் மீண்டும் இந்தப் படத்தை இன்று (டிசம்பர் 31) தமிழகமெங்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. மீண்டும் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகியிருப்பது தொடர்பாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
'ஆயிரத்தில் ஒருவன்' மறுவெளியீடு தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
» 'அத்ரங்கி ரே' இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதி
» ரன்பீர் கபூர் படத்தின் இணையும் அனில் கபூர், பரினீதி சோப்ரா
" 'ஆயிரத்தில் ஒருவன்' எனது 2-வது படம். 'பருத்தி வீரன்' படம் டப்பிங் போய்க்கொண்டு இருக்கும்போதே, செல்வராகவன் எனக்கு போன் பண்ணினார். 2-வது படமே செல்வராகவனுடன், அதுவும் சாகசங்கள் நிறைந்த படம் என்றவுடன் அளவில்லாத சந்தோஷம். 'பருத்தி வீரன்' படத்துக்குப் பிறகு என்ன படம் பண்ணுவது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்தபோது, இவ்வளவு பெரிய படம் என்றபோது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் 'ஆயிரத்தில் ஒருவன்' படக்குழுவினர் அனைவரும் வேறு எந்தவொரு படத்தைப் பற்றியும் யோசிக்காமல், சிந்திக்காமல், முழுமையாக தமிழ் சினிமாவில் இதற்கு முன்னாடி வராத சினிமா ஒன்று பண்றோம் என்ற ஆர்வத்தில் அவ்வளவு கடுமையாக உழைத்தோம். ஒவ்வொரு நாளும் செல்வராகவன் சொல்லும் விஷயங்கள், செட்கள் எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.
கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குநர் செல்வராகவன். அவருடன் பணிபுரிந்தது அவ்வளவு மகிழ்ச்சி. அந்தப் படத்திலிருந்து அவ்வளவு விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தின் இசையை இன்றைக்கு வரைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை மீண்டும் திரையில் கொண்டுவருவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு முதலில் ரவீந்திரன் சாருக்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள். சினிமா மீது ஆர்வம் கொண்ட ரவீந்திரன் சார் இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் இப்படியொரு முயற்சியை எடுத்திருக்கவே முடியாது. அவருடைய இந்த முயற்சி பெரிய வெற்றியடைய வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
'ஆயிரத்தில் ஒருவன்' படம் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு உங்களுடைய அன்பு ஒன்றே காரணம். அந்த அன்புக்கு நன்றி".
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.