'அத்ரங்கி ரே' இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

'அத்ரங்கி ரே' இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதனிடையே இன்று (டிசம்பர் 31) 'அத்ரங்கி ரே' இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நலமாகவே இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி."

இவ்வாறு ஆனந்த் எல்.ராய் தெரிவித்துள்ளார்.

’அத்ரங்கி ரே’ இயக்குநருக்கு கரோனா உறுதியான நிலையில், படக்குழுவினர் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. சமீபத்தில் தனுஷ் படப்பிடிப்பை முடித்து திரும்பியவுடனே கரோனா பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு நெகடிவ் என்பது உறுதியானவுடன் தான் குடும்பத்தைப் பார்க்கவே சென்றதாக அவருடைய தரப்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE