தணிக்கையில் 'யு': 'ஈஸ்வரன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'ஈஸ்வரன்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன், யோகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்றது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு அந்தப் பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள்.

தற்போது அந்தப் பணிகளும் முடிந்து, 'ஈஸ்வரன்' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். இதனால், படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை புதிய போஸ்டருடன் சிம்பு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முழுமையாக சிம்பு உடல் எடையைக் குறைத்தவுடன் நடித்துள்ள படம் என்பதால், இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஈஸ்வரன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE