தெலுங்கு திரைப்பட நடிகர் வருண் தேஜ் கொனிடெலாவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டுத் தனிமையில் இருக்கும் அவர் தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நிலவியதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் உள்ளிட்டவற்றுக்குத் தடை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், பல கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியும் திரைப்பட, தொலைக்காட்சி நட்சத்திரங்கள், கலைஞர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அன்று நடிகர் சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான ராம் சரண் தேஜா, தனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தார்.
தற்போது இன்னொரு தெலுங்கு நட்சத்திரமான வருண் தேஜுக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
» நடிகர் ராம் சரணுக்கு கரோனா தொற்று உறுதி
» ரஜினி மருத்துவமனையில் அனுமதி: ரத்த அழுத்தப் பிரச்சினை எதிரொலி
"லேசான அறிகுறிகளுடன் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன். அனைவரது அன்புக்கும் நன்றி" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருண் தேஜ் பகிர்ந்துள்ளார்.
வருண் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் மூத்த சகோதரர் நாகேந்திர பாபுவின் மகன். ‘எஃப் 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ‘எஃப் 3’ திரைப்படத்துக்கான வேலைகளில் வருண் ஈடுபட்டு வந்தார்.