'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் யூடியூப் சேனலுக்கு ராஜமௌலி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் ஒரு படத்தை எடுக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியான, மரியாதையான, நட்புணர்வுடன் கூடிய ஒரு குழு இருப்பது மிக முக்கியம். நம்மைச் சுற்றி கோபக்காரர்களை வைத்துக் கொண்டு நல்ல படம் எடுப்பது என்பது இயலாத காரியம்.
» நடிகர் ராம் சரணுக்கு கரோனா தொற்று உறுதி
» டப்பிங் கலைஞர், நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் மரணம்
அப்படிப்பட்ட ஒரு சூழலுக்காக நாம் குறிப்பிட்ட சில விஷயங்களை இழக்க வேண்டும். ஒரு நல்ல படத்துக்கு அதுதான் மிகவும் முக்கியம். தொடர்ந்து சிலரோடு பணிபுரியும்போது, அவர்களோட நாம் நண்பர்களாகி விடுவோம். பிறகு அடுத்தடுத்த படங்களுக்காக கதை எழுதும்போது இயல்பாகவே அந்த நடிகர் நம் மனதில் வந்துவிடுவார்.
இவ்வாறு ராஜமௌலி கூறியுள்ளார்.