நடிகர் ராம் சரணுக்கு கரோனா தொற்று உறுதி

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வரை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராம் சரண் கலந்து கொண்டார்.

கடந்த 25ஆம் தேதி கிறிற்துமஸ் தினத்தன்று ஒரு விருந்து நிகழ்ச்சியை ராம் சரண் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ராம்சரண் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து உறுதியுடன் வெளியே வருவேன் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களில் என்னோட இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை குறித்த தகவல்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராம்சரண் விரைவில் குணமடைய ரசிகர்களும், பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE