பிரபல டப்பிங் கலைஞரும், திரைப்பட நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
சென்னையைச் சேர்ந்த அருண் அலெக்ஸாண்டர் கடந்த பத்து வருடங்களாக டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்தார். 'அவதார்' உள்ளிட்ட உலகப் புகழ்மிக்க படங்களின் முக்கியக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
'மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி' போன்ற பிரபல படங்களில் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார்.
இந்நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இன்று (திங்கட்கிழமை) அருண் அலெக்ஸாண்டர் உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்குத் திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.