'ஈஸ்வரன்' இசைப்பணிகள் முடிவு: தமன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'ஈஸ்வரன்' படத்தின் இசைப்பணிகள் முடிவடைந்ததை, இசையமைப்பாளர் தமன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன், யோகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவான படங்களில் மிகக் குறைந்த நாட்களில் உருவான படம் 'ஈஸ்வரன்' என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது படத்தின் இசைப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் தமன் கூறியிருப்பதாவது:

"சிம்பு நடித்திருக்கும் 'ஈஸ்வரன்' படத்துக்கான அனைத்துவிதமான இசையமைப்புப் பணிகளும் முடிந்துவிட்டன. ஆதரவு தந்து நம்பிக்கை வைத்த எங்கள் அன்பு எஸ்டிஆருக்கும், இயக்குநர் சுசீந்திரனுக்கும் நன்றி. 'பிசினஸ்மேன்' படத்துக்குப் பிறகு நான் வேகமாக முடித்திருக்கும் இரண்டாவது படம் 'ஈஸ்வரன்'தான். 2 மாதங்களில் முடித்துவிட்டேன்".

இவ்வாறு தமன் தெரிவித்துள்ளார்.

தற்போது சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றுள்ளார் சிம்பு. அங்கிருந்து எங்கு செல்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், புத்தாண்டுக்கு சிம்பு சென்னையில் இருக்க மாட்டார் என்பதை மட்டும் உறுதிப்படுத்தினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE