கடும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இயக்குநர் ரெமோ டிசோஸாவின் மனைவி லிஸெல், நடிகர் சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரெமோ டிசோஸா. இவர் நடன இயக்குநராகத் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் ‘ஏபிசிடி’, ‘ஃப்ளையிங் ஜாட்’, ‘ரேஸ் 3’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் நெஞ்சுவலியால் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரெமோ டிசோஸா, தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இந்தக் கடினமான சூழலில் உதவிய சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெமோவின் மனைவி லிஸெல் நன்றி தெரிவித்துள்ளார். அதில் சல்மான் கான் ஒரு தேவதை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
''எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சல்மான் கானுக்கு நன்றி கூற விரும்புகிறேன். உணர்வுபூர்வமான ஆதரவை அளித்த அவர் ஒரு தேவதை. எங்களுடன் உறுதுணையாக இருந்தமைக்கு நன்றி அண்ணா. நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும், பிரார்த்தனை செய்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு லிஸெல் கூறியுள்ளார்.