அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கும் ராஷ்மிகா 

By பிடிஐ

விகாஸ் பால் இயக்கவுள்ள புதிய இந்திப் படத்தில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.

2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் 2018ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமானார் ராஷ்மிகா. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சுல்தான்’, அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘குயின்’, ‘சூப்பர் 30’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கவுள்ள புதிய இந்திப் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.

நகைச்சுவைப் படமாக உருவாகவுள்ள இதில் அமிதாப் பச்சனுக்கு மகளாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்துக்கு ‘டெட்லி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்துப் படக்குழுவினரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ள ‘மிஷன் மஞ்சு’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE