'ருத்ரன்' அப்டேட்: தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநர் ஆகிறார்

By செய்திப்பிரிவு

'ருத்ரன்' படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் உள்ளார் பைவ் ஸ்டார் கதிரேசன்.

'லட்சுமி' இந்திப் படத்தைத் தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதம் நடைபெற்று வரும் சமயத்தில், நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் லாரன்ஸ் கவனித்து வருகிறார்.

பி.வாசு இயக்கத்தில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்திலும், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இதில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்துக்கு 'ருத்ரன்' எனப் பெயரிடப்பட்டு, போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது படக்குழு.

'ருத்ரன்' படத்தின் இயக்குநர் யார் என்பதைப் படக்குழு அறிவிக்கவே இல்லை. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

தற்போது தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களை அவர் தயாரித்திருந்தாலும், இதுவரை இயக்குநராகப் பணிபுரிந்ததில்லை. தற்போது 'ருத்ரன்' படத்தைத் தயாரித்து, இயக்கவுள்ளார்.

லாரன்ஸ் உடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE