நான் தொடங்கிய இடம்; இந்த முறையாவது செல்வராகவனை ஈர்ப்பேன்: தனுஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்திப் படம் 'அத்ரங்கி ரே'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

அதனைத் தொடர்ந்து செல்வராகவன், மித்ரன் ஜவஹர், ராம்குமார் மற்றும் ஹாலிவுட் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தாணு தயாரிக்கவுள்ளார்.

செல்வராகவன் படத்தில் மீண்டும் பழைய கூட்டணி ஒன்றிணைகிறது. செல்வராகவனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

மீண்டும் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"செல்வராகவன் + யுவன் + அரவிந்த் கிருஷ்ணா.. அட அட... சரியாக நான் தொடங்கிய இடம். என்னைச் செதுக்கிய, உருவாக்கிய, நான் இன்று இந்த நிலையில் இருக்க ஒரே காரணமான என் சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த முறையாவது அவரை ஈர்ப்பேன் என்று நம்புகிறேன்".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE