எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அரவிந்த் சாமியின் புதிய லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது 'தலைவி' படக்குழு.
அதிமுகவின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியின் புதிய லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. முன்னதாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தாலும், தற்போது அரசியலுக்கு வந்தவுடன் உள்ள எம்.ஜி.ஆர் கெட்டப்பில் அரவிந்த் சாமி நடித்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அரவிந்த் சாமி, "புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு ஒரு கவுரவம். ஆனால், மிகப்பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தலைவரின் நினைவாக இந்தப் படங்களை இங்கு பகிர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.