4 பேருக்கு கரோனா தொற்று; 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒத்திவைப்பு: சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பிருந்தா மாஸ்டர் மேற்பார்வையில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற பாடலொன்றைப் படமாக்கி வந்தது படக்குழு.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தி வந்தது. 'அண்ணாத்த' படப்பிடிப்பு தளத்தில் வழக்கமாக எடுக்கப்படும் கரோனா பரிசோதனையில் இன்று (டிசம்பர் 23) 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கரோனா நெகட்டிவ் என்றாலும், ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது. தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:

"'அண்ணாத்த' படப்பிடிப்பில் வழக்கமாக நடைபெறும் பரிசோதனையின் போது, படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்ற குழுவினர் யாருக்கும் தொற்று இல்லை. அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது"

இவ்வாறு சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE