மதுர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியா லாக்டவுன்

By செய்திப்பிரிவு

இயக்குநர் மதுர் பண்டார்கர் 'இந்தியா லாக்டவுன்' என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் முழு ஊரடங்கு நிலவியது. இதனால் திரைத்துறை உள்ளிட்ட பல துறைகள் மொத்தமாக முடங்கின. ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது திரைப்படப் படப்பிடிப்புகளும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து வருகின்றன.

எனவே தொடர்ந்து பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் அடுத்த படங்கள் பற்றி அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இயக்குநர் மதுர் பண்டார்கரும் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார்.

இந்தியா லாக்டவுன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிறது. மதுர் பண்டார்கரும், பிஜே மோஷன் பிக்சர்ஸும் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்புத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

கடைசியாக மதுர் பண்டார்கர் 2017ஆம் ஆண்டு ’இந்து சர்கார்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவிய அவசர நிலை காலத்தைப் பற்றிய இந்தப் படத்தைக் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE