‘சூஃபியும் சுஜாதையும்’ இயக்குநர் ஷாநவாஸ் கவலைக்கிடம்

இந்த ஆண்டு ஜெயசூரியா, அதிதி ராவ் நடிப்பில் வெளியான படம் ‘சூஃபியும் சுஜாதையும்’. கரோனா அச்சுறுத்தலால் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படத்தை நரனிப்புழா ஷாநவாஸ் இயக்கியிருந்தார். கடந்த ஜூலை மாதம் அமேசாம் ப்ரைம் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஷாநவாஸ் கடந்த வாரம் பாலக்காடு அருகில் உள்ள அட்டபாடியில் தனது அடுத்த படமான ‘காந்திராஜன்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் பலரும் இரங்கல் தெரித்துவந்த நிலையில் ‘சூஃபியும் சுஜாதாயும்’ தயாரிப்பாளர் விஜய் பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஷாநவாஸ் வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். அவரது இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அற்புதம் நடக்கும் என்று நம்புவோம். தவறான தகவல்களை பகிரவேண்டாம்’

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE