மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
» காதல் மன்னன் நூற்றாண்டு: ஜெமினி கணேசனின் மகன் சதீஷ் சிறப்புப் பேட்டி
» 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்; சுவாரசியப் பின்னணி: ஆண்ட்ரியா பகிர்வு
பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பதால் அவர்களுக்கான உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என ஒட்டுமொத்தமாக 400 பேர் வரை இருப்பதால் படப்பிடிப்புக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க, படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
சுமார் 1 மாதத்துக்கு இந்தப் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது. அதற்குத் தகுந்தாற்போல் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவழியாக 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் முன்னணி நடிகர்களோ நிம்மதி அடைந்துள்ளனர். ஏனென்றால், நீளமான முடி எல்லாம் வளர்த்து கெட்டப் மாறியிருப்பதால், வேறு எந்தவொரு படத்திலும் அவர்களால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.