கரோனா தொற்றால் ரகுல் ப்ரீத் சிங் பாதிப்பு

By செய்திப்பிரிவு

முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்".

இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் பூரண நலம்பெறப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE