சந்தானத்தின் புதிய படம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'டிக்கிலோனா' மற்றும் 'பாரீஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சந்தானம். இதில் 'டிக்கிலோனா' திரைப்படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஜனவரியில் திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது 'பாரீஸ் ஜெயராஜ்'.

இந்த இரண்டு படங்களின் பணிகளையும் முடித்துவிட்டதால், தற்போது புதிய படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் சந்தானம். தந்தை - மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கி வருகிறார். இவர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக மாதவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

சந்தானத்தை இயக்கி வருவது குறித்து ஸ்ரீனிவாச ராவ் கூறியிருப்பதாவது:

"இந்தப் படத்தின் கதை சந்தானத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காமெடிதான் களம் என்றாலும் கூட தந்தை - மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை - மகனையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையவைக்கும்.

தந்தை - மகனுக்கு இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால், படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்".

இவ்வாறு ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE