சிம்புவின் ஒத்துழைப்பு: 'மாநாடு' படக்குழு மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சிம்புவின் ஒத்துழைப்பால் படப்பிடிப்பு நாட்கள் மிச்சமான நிலையில், 'மாநாடு' படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் புதுச்சேரியில் படமாக்கி வந்தது படக்குழு. அப்போது நிவர் புயல் பாதிப்பால், பாதியிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. மீண்டும் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டது படக்குழு.

புதுச்சேரியில் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாகப் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் கூட, சிம்புவின் ஒத்துழைப்பால் ஒருநாளைக் கூட வீணாக்காமல், அரங்குகளுக்குள் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பையும் புதுச்சேரியிலேயே நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

'மாநாடு' திரைப்படம் அரசியல் சார்ந்தது என்பதால் அதிக துணை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆகையால் நிறையக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய தேவை இருந்தாலும், திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்கிறது படக்குழு.

சிம்புவின் வேகம், ஒத்துழைப்பு ஆகியவையே இதற்குக் காரணம் என்பதால், 'மாநாடு' படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE