4 மாதங்களாகியும் அனுராக் மீது எந்த நடவடிக்கையும் இல்லை - பாயல் கோஷ் குற்றச்சாட்டு

தான் புகாரளித்து நான்கு மாதங்களாகியும் அனுராக் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நடிகை பாயல் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும், பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வந்தார்.

இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்புக் கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

சுஷாந்த் மரணம், பாலிவுட் போதைப் பொருள் விவகாரங்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த பாயல் கோஷ் மீண்டும் இது குறித்து பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

நான்கு மாதங்கள் கடந்து விட்டன. ஆதாரங்களை நான் சமர்ப்பித்த போதிலும் அனுராக் காஷ்யப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் இறந்தால்தான் அனைத்தும் மேற்கொண்டு நடக்குமா?

இவ்வாறு பாயல் கோஷ் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE