சோனு சூட்டுக்குப் புகழாரம் சூட்டிய சிரஞ்சீவி

By செய்திப்பிரிவு

சோனு சூட்டுக்குத் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் சிரஞ்சீவி.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படப்பிடிப்புக்கு சோனு சூட் வந்தபோது, அவருக்கு சிரஞ்சீவி பெரும் வரவேற்பு அளித்துள்ளார்.

இது தொடர்பாக சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில், "சந்தேகத்திற்கு இடமின்றி நான் பணிபுரிந்ததிலேயே அருமையான மற்றும் பணிவான நடிகர்களில் ஒருவர்" என்று தெரிவித்துள்ளார்.

சோனு சூட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக அவருடைய ட்வீட்டைக் குறிப்பிட்டு சிரஞ்சீவி, "நன்றி சோனு சூட். நல்ல மனிதர்களில் ஒருவர் நீங்கள். ஏழைகளுக்கு உதவும் உங்கள் அற்புதமான பணியைத் தொடர்ந்து செய்வதோடு, இன்னும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்துங்கள். அதற்கான சக்தி உங்களுக்குக் கிடைக்கட்டும். உங்கள் தங்கமான மனதிற்கு அனைத்து அங்கீகாரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

'ஆச்சாரியா' படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE