ஒரு நடிகராகத் தனக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்ததாக நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.
அபிஷேக் சாவ்பே மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘ராத் அகேலி ஹை’. நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியான இப்படத்தில் நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் காவல்துறை அதிகாரியாக நவாசுதீன் நடித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேபோல எழுத்தாளர் மானு ஜோசப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ‘சீரியஸ் மென்’. சுதிர் மிஸ்ரா தயாரித்து இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் மாதம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு தனக்குச் சிறப்பாக அமைந்ததாக நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார். இதுகுறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:
''ஒரு மனிதனாக இந்த ஆண்டு மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கும் அப்படியே சென்றது. ஆனால் ஒரு நடிகனாக எனக்குச் சிறப்பாக அமைந்தது. என்னுடைய ‘ராத் அகேலி ஹை’ மற்றும் ‘சீரியஸ் மென்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.
இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், சந்தேகத்திற்கிடமின்றி இந்த ஆண்டு எனக்குச் சிறப்பாக அமைந்தது''.
இவ்வாறு நவாசுதீன் கூறியுள்ளார்.