'க/பெ.ரணசிங்கம்' வசனகர்த்தாவுக்குத் தயாரிப்பாளர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் கார் பரிசளித்துள்ளனர்.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்துக்கு முழுமையாக வசனம் எழுதியவர் சண்முகம் முத்துசாமி. மேலும், இயக்குநர் விருமாண்டியுடன் முதற்கட்டப் பணியிலிருந்து தொடர்ச்சியாகப் பயணித்தவர் சண்முகம் முத்துசாமி என்பது நினைவுகூரத்தக்கது. 'க/பெ ரணசிங்கம்' வெற்றிக்கு இயக்குநர் விருமாண்டிக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்தது தயாரிப்பு நிறுவனம்.
தற்போது சண்முகம் முத்துசாமிக்கும் கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளனர். இதனைத் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து சண்முகம் முத்துசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'க/பெ ரணசிங்கம்' உழைப்பின் வெற்றிக்குப் பாராட்டுப் பத்திரமாகப் பரிசளித்த முதலாளி கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சார், தலைவி ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் நன்றி நன்றி. வெற்றிக்குத் தோள்கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார், மாப்பிள்ளை விருமாண்டி மற்றும் குழுவின் ஒவ்வொருவருக்கும் நன்றி".
இவ்வாறு சண்முகம் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சண்முக முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அடங்காதே' திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. ஜனவரியில் வெளியிடப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
#கபெரணசிங்கம் உழைப்பின் வெற்றிக்கு பாராட்டு பத்திரமாக பரிசளித்த முதலாளி @kjr_studios #Rajesh சார் , தலைவி @aishu_dil இருவருக்கும் நன்றி நன்றி...!
வெற்றிக்கு தோள்கொடுத்த மக்கள் செல்வன் @VijaySethuOffl சார்
மாப்பிள்ளை @pkvirumandi1 மற்றும் குழுவின் ஒவ்வொருவருக்கும் நன்றி pic.twitter.com/KcOJrKUJ6I—