பாலிவுட்டில் குறிப்பிட்ட ரசிகர் தரப்புக்குப் படம் எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.
முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை அமேசான் ப்ரைம் தயாரித்துள்ளது. இந்த சீஸனில் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் சமந்தா அறிமுகமாகிறார். 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸின் விளம்பரத்துக்காகப் படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து வருகின்றனர்.
அப்படி சமந்தா சமீபத்தில் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாலிவுட் - தென்னிந்திய சினிமா வித்தியாசத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
» ‘ஃபேமிலி மேன் 2’வில் பல விதிகளை உடைத்திருக்கிறேன்: சமந்தா
» ஊக்கமாய் இருங்கள்: நயன்தாராவுக்கு சமந்தா பிறந்த நாள் வாழ்த்து
"பாலிவுட்டில் குறிப்பிட்ட ரசிகர் தரப்புக்குப் படம் எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அங்கு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ஆனால், தென்னகத்தில் திரையரங்கில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் படம் பிடிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இப்போது ஓடிடி வந்த பிறகு இன்னும் துணிச்சலாகப் படமெடுக்கிறோம். அதனால் இப்போது வரும் படங்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றன'' என்று சமந்தா கூறியுள்ளார்.
இந்தத் தொடரின் நாயகனான மனோஜ் பாஜ்பாய் பேசுகையில், "நான் தென்னிந்திய திரைப்படத் துறையின் மிகப்பெரிய ரசிகன். புதிய சினிமா துறைகளைப் பற்றி ஆராய்ந்து, தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து கற்கும் வழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். பாலிவுட்டில் செய்வதை விட அவர்கள் கதை சொல்லும் விதம், நடிக்கும் விதம், அணுகுமுறை என எல்லாமே முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.