ஜனவரியில் வெளியாகிறது தள்ளிப் போகாதே

By செய்திப்பிரிவு

அதர்வா நடித்துள்ள 'தள்ளிப் போகாதே' திரைப்படம் ஜனவரியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

'பூமராங்' படத்தைத் தொடர்ந்து, ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் பணிபுரிந்து வந்தார் இயக்குநர் கண்ணன். அதர்வா நடிக்கும் 'தள்ளிப் போகாதே' மற்றும் சந்தானம் நடிக்கும் 'பிஸ்கோத்' ஆகிய படங்களில் மாறிமாறி பணிபுரிந்து வந்தார்.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 'பிஸ்கோத்' திரைப்படம் வெளியாகிவிட்டது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 'தள்ளிப் போகாதே' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் கண்ணன்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'தள்ளிப் போகாதே' என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதர்வா, அனுபா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது 'தள்ளிப் போகாதே' திரைப்படம் ஜனவரியில் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக கோபி சுந்தர், பாடல்கள் மற்றும் வசனம் கபிலன் வைரமுத்து, எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE