சந்தீப் கிஷனுக்கு வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வரும் படத்தின் வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'நட்பே துணை' படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் சந்தீப் கிஷன். 'ஏ1 எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, கோனா வெங்கட் தயாரிப்பில் உருவாகும் 'ரவுடி பேபி' படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சந்தீப் கிஷன். ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு செளவ்ரஷ்டா ராம் இசையமைக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் கிஷன் - பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 'டிஸ்கோ ராஜா' படத்துக்குப் பிறகு பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியுள்ள தெலுங்குப் படமாக இது அமைந்துள்ளது.

சந்தீப் கிஷன் - பாபி சிம்ஹா ஆகியோருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தொடர்பான அறிவிப்பைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE