யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்: விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சூரி. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஷ்ணு விஷால் - சூரி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வருவதால், எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ஜூவாலா கட்டா வீட்டில் நடந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டார் விஷ்ணு விஷால். அப்போது எடுத்த புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு ரசிகர் ஒருவர், "சூரியை ஏமாத்தாதீங்க தல. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த சூரி செய்திக்குப் பிறகு உங்களை வெறுக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

அந்த ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உண்மை இன்னும் வெளியே வரவில்லை. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும். யார் நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்பது சீக்கிரமாகவே வெளியே வரும். அதன் பிறகு என்னை வெறுப்பதா அல்லது இன்னும் நேசிப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE