'கே.ஜி.எஃப்' தயாரிப்பாளரின் புதிய படம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப்' தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்திருந்த இப்படத்தின் 2-ம் பாகமான 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' தயாரிப்பில் உள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தையும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. 'சலார்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் தொடங்கவுள்ளது.

'சலார்' படத்தைத் தொடர்ந்து, ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'பகீரா' என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீமுரளி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் 'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல். அந்தக் கதைக்குத் திரைக்கதை அமைத்து சூரி இயக்கவுள்ளார்.

நேற்று (டிசம்பர் 17) ஸ்ரீமுரளியின் பிறந்த நாளை முன்னிட்டு, 'பகீரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் "சமூகம் காடாக மாறிய நிலையில், ஒரே ஒரு மிருகம் மட்டுமே நீதிக்காகக் கர்ஜிக்கும்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைத்துப் பார்த்தால், இதில் காவல்துறை அதிகாரியாக ஸ்ரீமுரளி நடிக்கவுள்ளது உறுதியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE