எம்ஜிஆர் கெட்டப்: மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி

By செய்திப்பிரிவு

'தலைவி' படத்தில் எம்ஜிஆர் கெட்டப்புக்காக தனக்கு மேக்கப் போட்ட ரஷித்துக்கு அரவிந்த் சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கங்கணா ரணாவத் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இதில் எம்.ஜி.ஆராக நடித்து வந்த அரவிந்த் சாமியின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. தன்னை எம்.ஜி.ஆராக மாற்ற மேக்கப் போட்ட, தேசிய விருது வென்ற மேக்கப் மேன் ரஷித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.

இது தொடர்பாக அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி”.

இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் விரைவில் முடியவுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி, கோடை விடுமுறைக்கு வெளியிட 'தலைவி' படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE