முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் த்யான் சந்த் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகிறது.
1925ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை 1500 கோல்கள் அடித்து மாபெரும் சாதனையைப் புரிந்தவர் இந்திய ஹாக்கி வீரர் த்யான் சந்த். மேலும் 1928,1932,1936 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைக்க முக்கியக் காரணமாகவும் இருந்தவர். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29, தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஹாக்கி ஆளுமை த்யான் சந்த்தின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் அபிஷேக் சவ்பே. இப்படத்துக்கான திரைக்கதைப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், த்யான் கதாபாத்திரத்துக்காக பாலிவுட் பிரபலங்களிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நடிகர், நடிகையர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அபிஷேக் சவ்பே கூறியுள்ளதாவது:
» ராவணன் குறித்த சர்ச்சை கருத்து: சைஃப் அலி கான் மீது வழக்கு
» இதுவரை சுதா இயக்கத்திலேயே மிகச்சிறந்த படம் - ‘தங்கம்’ குறித்து மாதவன் பகிர்வு
''நமது தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில், மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் த்யான் சந்த். அவரது பயோபிக் கதையை இயக்குவதில் பெருமையடைகிறேன். அவர் ஹாக்கியில் செய்த ஒவ்வொரு சாதனையையும் ஒரு தனித் திரைப்படமாக எடுக்கலாம். இக்கதைக்காக பல்வேறு ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டோம். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம்''.
இவ்வாறு அபிஷேக் கூறியுள்ளார்.
ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் இப்படம் 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.