தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில்லை என்று இயக்குநர் க்றிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெனெட்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கரோனா நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘டெனெட்’ வெளியானது.
தொழில்நுட்பங்களை குறிப்பாக சமூக வலைதளங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை நோலன் பயன்படுத்துவதில்லை என்ற ஒரு கருத்து நீண்ட காலமாகவே வைக்கப்படுவதுண்டு. இந்நிலையில் முதல்முறையாக அது குறித்து வாய் திறந்திருக்கிறார் நோலன்.
» சுமார் 300 திரையரங்குகள் மூடல்: 'மாஸ்டர்' கை கொடுக்குமா? திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பு
» பா.இரஞ்சித் - மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி உறுதி
வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நோலன் இது குறித்து பகிர்ந்திருக்கிறார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்பது உண்மைதான். அதற்கு பதிலாக என்னிடம் ஒரு பழைய மாடல் ஃப்ளிப் போன் உள்ளது. அதை அவ்வப்போது நான் வெளியில் எடுத்துச் செல்வேன். எனக்கு எளிதில் கவனச் சிதறல் ஏற்படும், எனவே அலுப்பு ஏற்படும் சமயத்தில் இணையத்தை பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை.
தற்போது மக்கள் ஆன்லைனில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அது போன்ற இடைபட்ட தருணங்களில் தான் என்னால் சிறப்பான முறையில் சிந்திக்க முடிகிறது. அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது என்னை சுற்றியிருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கும். என்னால் மறைந்து கொள்ளவும் முடியாது. எனவே பணியின் போது என்னை தொடர்பு கொள்வது எளிது.
இவ்வாறு நோலன் கூறியுள்ளார்.