‘தங்கம்’ என் இதயத்தை தொட்ட கதை - ‘பாவக் கதைகள்’ குறித்து இயக்குநர் சுதா கொங்கரா

By ஐஏஎன்எஸ்

‘பாவக் கதைகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு படங்களில் ஒன்றான ‘தங்கம்’ படத்தின் கதை தன் இதயத்தை தொட்டது என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகவுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒவ்வொரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகப்பட்ட கதைகளாகும். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வரவேறபை பெற்றது.

இதில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள கதையின் பெயர் ‘தங்கம்’. இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பவானி ஸ்ரீ உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து சுதா கொங்கரா கூறியுள்ளதாவது:

இப்படத்தின் கதை என்னுடைய இதயத்தை தொட்டது. திருநங்கைகளின் உணர்வுகளையும், ஆசைகளையும், அவர்களது போராட்டங்களையும் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்கள் சார்ந்த சமூகம் குறித்த ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டேன். மேலும் பல்வேறு நபர்களையும் சந்தித்தேன்.

அப்பட்டமான அனைத்து உணர்ச்சிகளையும் கொண்ட இந்த ஆழமான கதையை 30 நிமிடங்களில் சொல்வது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ‘தங்கம்’ கதையை முதன்முதலில் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அதிர்வுகள் பார்வையாளர்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சுதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE