‘தேஜஸ்’ படத்துக்காக அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த நடிகை கங்கனா

By ஐஏஎன்எஸ்

‘தேஜஸ்’ படத்துக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நடிகை கங்கனா நேற்று சந்தித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘தலைவி’ தவிர்த்து ‘தாக்கட்’, ‘தேஜஸ்’ ஆகிய படங்களிலும் கங்கணா கவனம் செலுத்தி வருகிறார்.

இதில் சர்வேஷ் மேவரா இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடித்து வரும் புதிய படம் ‘தேஜஸ்’. 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நடிகை கங்கனா நேற்று சந்தித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

‘இன்று ‘தேஜஸ்’ படக்குழுவினர் மதிப்பிற்குரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது. இந்திய விமானப்படையினரிடம் எங்கள் படத்தின் கதையை கூறி சில அனுமதிகளையும் பெற்றோம். ஜெய் ஹிந்த்’

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

‘தேஜஸ்’ இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படம் ஏப்ரல் 2021 வெளியீடு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE