கரோனா பாதிப்பால் வேலை இழந்தோருக்கு இ-ரிக் ஷா வழங்குகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட் - ‘சொந்த காலில் நிற்கும் திட்டம்’

கரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்களுக்கு, இ-ரிக் ஷாக்களை பரிசாக வழங்க பாலிவுட் நடிகர் சோனு சூட் திட்டமிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சோனு சூட் (47). கரோனா வைரஸ் பரவிய பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே பலர் சிக்கித் தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இலவசமாக ரயில், பேருந்து, விமானங்களை ஏற்பாடு செய்து தந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்களுக்கு இ-ரிக் ஷாக்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.

அதன்படி, ‘குத் கமாவோ கர்சலோ’ (சொந்தமாக சம்பாதியுங்கள்; வீட்டுக்கு செல்லுங்கள்) என்ற திட்டத்தை சோனு சூட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மக்கள் என் மீது செலுத்தும் அன்புதான், என்னை அவர்களுக்காக ஏதாவது செய்ய தூண்டுகோலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் என் மீது அன்பு செலுத்தி வருகின்றனர். கரோனா வைரஸால் வேலை இழந்தவர்களுக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் மிகவும் முக்கியமானதாக நான் நம்புகிறேன்.

அதன்படி, என்னுடைய திட்டம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். சொந்த காலில் நிற்கவும், சுயசார்புடன் அவர்கள் வாழ்க்கையை நடத்தவும் உதவும். இவ்வாறு சோனுசூட் கூறினார். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘பிரவாசி ரோஜ்கர் ஆப்’ ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த ஆப் மூலம் பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE