மனிதர்களின் ஆழ்மனதையும் ஊடுருவிய கலைஞன்: சேரனுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சேரனின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான சேரன் இன்று (டிசம்பர் 12) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் சேரன்.

நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகள், தமிழக அரசின் விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சேரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சேரன் பிறந்த நாளை முன்னிட்டு, மூத்த இயக்குநரான பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மண்ணையும், மனிதர்களின் ஆழ்மனதையும் ஊடுருவிய கலைஞன். உறவுகளுக்குள் பாசத்தையும், உணர்வுகளையும், மழைபோல் கொட்டித் தீர்க்கும் பிரபஞ்சன் மகன் சேரனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேரன் தனது ட்விட்டர் பதிவில், "உங்கள் கால்தடம் அழைத்து வந்த பாதையில் கரை சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் அப்பா... உங்களின் வாழ்த்தும் அன்பும் எழுத்தும் எனக்கான பிறவிப் பயன்.. நன்றி அப்பா..." என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE