சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை அனுசுயா பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி தமிழில் படமொன்று தயாராகவுள்ளது. சித்ரா லட்சுமணன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' இயக்குநர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.
இந்த பயோபிக்கில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கப் பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே அனுசுயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவால், அவர் தான் சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
இந்தத் தகவல் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, "நான் சில்க் ஸ்மிதாவாக எந்தவொரு பயோபிக்கிலும் நடிக்கவில்லை. நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனுசுயா.
» 'பிளாக் பேந்தர் 2' படத்தில் சாட்விக் போஸ்மேனுக்குப் பதிலாக நடிப்பது யார்?- டிஸ்னி அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வதந்தி பரவியது ஏன்?
டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அனுசுயா நடித்து வருகிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு மேக்கப் போடும்போது, சில்க் ஸ்மிதா போன்று மேக்கப் செய்து, உடையணிந்து நடித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த கெட்டப்புக்கான பின்புலம் சில்க் ஸ்மிதா கெட்டப்பை வைத்து உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். இதை வைத்தே சில்க் ஸ்மிதா பயோபிக்கில் அனுசுயா நடிப்பதாக வதந்தி பரவியது.