'பிளாக் பேந்தர் 2' திரைப்படத்தில் மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்குப் பதிலாக யாரை நாயகனாக நடிக்க வைப்பது என்பது குறித்து டிஸ்னி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியான மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'பிளாக் பேந்தர்' உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக கறுப்பின மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகன் சாட்விக் போஸ்மேனை சர்வதேச நட்சத்திரமாகவும் உயர்த்தியது. எனவே, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2016ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்திருந்த நாயகன் போஸ்மேன், கடந்த ஆகஸ்ட் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கவிருந்த இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அடுத்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பித்து ஆறு மாதங்களில் இந்தப் படத்தை முடிக்க மார்வல் நிறுவனம் திட்டமிடுவதாகச் செய்திகள் வந்தன. மேலும், இந்தப் படத்தில் முதல் பாகத்தில் ஷூரி என்கிற நாயகனின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்த லெடிடா ரைட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் நாயகன் சாட்விக் போஸ்மேனை கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் திரைக்குக் கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று தயாரிப்புத் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
» மறைந்த சாட்விக் போஸ்மேனை கவுரவித்த மார்வெல் நிறுவனம்
» உயில் எழுதி வைக்காத சாட்விக் போஸ்மேன்: நீதிமன்றத்தை அணுகும் மனைவி
தற்போது அவருக்குப் பதிலாக யாரும் நடிக்க வைக்கப்பட மாட்டார்கள் என்று டிஸ்னி தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"ரயன் கூக்ளர் இயக்கும் இந்தப் படம், சாட்விக் போஸ்மென் விட்டுச் சென்ற மரபுக்கு மரியாதை தரும் விதமாக, அவர் நடித்த டி சலா கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறு யாரையும் நடிக்க வைக்கப் போவதில்லை. ஆனால், வகாண்டா உலகத்தைப் பற்றி, முதல் பாகத்தில் அறிமுகமான கதாபாத்திரங்களைப் பற்றி இரண்டாம் பாகத்தில் கூடுதலாகச் சொல்லப்படும்" என்று டிஸ்னியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் போஸ்மேனின் மறைவு அவரது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தைத் தந்திருந்தாலும், அவருக்கு மரியாதை தரும் நிமித்தமாக டிஸ்னியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டையும் வரவேற்பையும் தந்துள்ளனர்.