ரத்தன் டாடா பயோபிக்கில் நானா?- நடிகர் மாதவன் பதில்

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பயோபிக்கில் நீங்கள் நடிக்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராகச் செயல்பட்டு வரும் அவர் தொழிலில் பல சாதனைகள் புரிந்தாலும், அவ்வப்போது செய்யும் நல உதவிகளுக்குப் புகழ் பெற்றவர்.

கோவிட்-19 நெருக்கடி சமயத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அவரது அறக்கட்டளைக்கு ஒதுக்கிய செயல் பலரது பாராட்டைப் பெற்றது. அப்போது அந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்த நடிகர் மாதவன், இதுதான் உண்மையான டாடாவின் ஆளுமை, பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கைக் கதையில், மாதவன் டாடா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதைச் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தன. மாதவன் டாடா கதாபாத்திரத்தில் இருப்பது போலச் சில புகைப்படங்களும் பகிரப்பட்டிருந்தன.

இதுகுறித்து ஒரு ரசிகை மாதவனிடம் இன்று ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார். இது உண்மையா? இது நடந்தால் பலருக்கும் இது பெரிய உத்வேகத்தைத் தரும் என்று அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருந்த மாதவன், "துரதிர்ஷ்டவசமாக இது உண்மையில்லை. ரசிகர்கள் சிலர் அவர்கள் விருப்பத்தில் உருவாக்கிய போஸ்டர். இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் இல்லை. அதைப் பற்றிய எந்தவித உரையாடலும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ’ராக்கெட்ரி’ என்கிற திரைப்படத்தில் மாதவன் தற்போது நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE