முல்லையாக அனைவருடைய மனதிலும் இருக்கிறார்: சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் கண்ணீர்

By செய்திப்பிரிவு

முல்லையாக அனைவருடைய மனதிலும் இருக்கிறார் என்று சித்ராவின் மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

நேற்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சித்ரா இல்லத்தில் அவருடைய உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சித்ராவுடன் நடித்தவர்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து சுஜிதா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"சித்ரா முல்லையாக அனைவருடைய மனதிலும் இருக்கிறார். இதை மட்டுமே என்னால் இப்போது நினைத்துப் பார்க்க முடிகிறது. முல்லையாக நடிக்கும்போது நிறைய எமோஷனல் காட்சிகளைக் கையாண்டுள்ளார். ஆனால், சித்ராவாக என்னுடைய கண்ணில் அவளுடைய சிரிப்பு மட்டுமே இருக்கிறது. அதைத் தாண்டி அவளிடம் வேறு எந்தவொரு உணர்ச்சியையும் பார்த்ததில்லை. நிஜத்தில் ஒரு தங்கையை இழந்த மாதிரி உணர்கிறேன். எங்களுடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அவர் இல்லாததை உணர்கிறது".

இவ்வாறு சுஜிதா தெரிவித்துள்ளார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சித்ராவுடன் நடித்துள்ள ஸ்டாலின் பேசியதாவது:

"சித்ரா இல்லாதபோது, அவரைப் பற்றிச் சொல்ல வேண்டியதாகி விட்டதே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. அவரை மாதிரி ஒரு தைரியமான பெண்ணை இனிமேல் பார்க்க முடியாது. முல்லையாக மக்களுடைய மனதில் இடம்பிடித்தாள்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சித்ராவின் வீட்டுக்கு அருகே உள்ள நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE