அமிதாப் பட ரீமேக்கில் நடிக்கிறேனா? - வருண் தவான் விளக்கம்

அமிதாப், கோவிந்தா இணைந்து நடித்த ‘படே மியான் சோட்டே மியான்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக பரவிய வதந்திக்கு நடிகர் வருண் தவான் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

1995ஆம் ஆண்டு கோவிந்தா, கரிஷ்மா கபூர் நடிப்பில் வெளியான படம் ‘கூலி நம்பர் 1’. இப்படம் தற்போது அதே பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவான், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை டேவிட் தவானே மீண்டும் இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜ் மேத்தா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜக் ஜக் ஜீயோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வருண் தவான். இதற்கான படப்பிடிப்பு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 1998ஆம் ஆண்டு அமிதாப், கோவிந்தா இணைந்து நடித்த ‘படே மியான் சோட்டே மியான்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க வருண் தவான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. பலரும் இத்தகவலை தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இணையத்தில் வெளியான இத்தகவல் பொய்யானது என்றும், ‘படே மியான் சோட்டே மியான்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்று வருண் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

‘ஜக் ஜக் ஜீயோ’ படிப்பிடிப்பில் இருந்தபோதுதான் வருண் தவானுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தற்போது அதற்கான சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE