சித்ராவின் இழப்பைக் கண்டிப்பாக அதிகம் உணர்வோம் என்று அவரது மறைவு குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனா தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்ரா தற்கொலை தொடர்பாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» பல பெண்களுக்கு நீங்கள் ஊக்கமாக இருந்தீர்கள்: சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் இரங்கல்
» என்னவோ தவறாக இருக்கிறது: சித்ரா தற்கொலை குறித்து வனிதா விஜயகுமார் சந்தேகம்
"நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. ஆனால், உங்கள் வளர்ச்சியையும், மக்களுக்கு உங்கள் மீது இருந்த அபிமானத்தையும் பார்த்திருக்கிறேன். உங்கள் அன்பார்ந்தவர்கள் அனைவரையும் விட்டுச் செல்ல முடிவெடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு எது இவ்வளவு வலியைக் கொடுத்தது என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்.
இந்த முடிவுக்கு உங்களைத் தள்ளியது என்ன மாதிரியான வலி என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. உங்கள் இழப்பைக் கண்டிப்பாக அதிகம் உணர்வோம்".
இவ்வாறு அஞ்சனா தெரிவித்துள்ளார்.