முதிர்ச்சியுடன் பிறந்தேன்; குழந்தைகளுடன் விளையாடியதில்லை: கங்கணா பகிர்வு

By ஐஏஎன்எஸ்

தான் பிறக்கும்போதே முதிர்ச்சியுடன் பிறந்ததாக நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘தலைவி’ தவிர்த்து ‘தாக்கட்’, ‘தேஜஸ்’ ஆகிய படங்களிலும் கங்கணா கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் வாரிசு அரசியல் தொடர்பான கருத்துகள், சிவசேனா கட்சியினருடனான மோதல், சக கலைஞர்களுடனான வார்த்தைப் போர் வரிசையில் தற்போது விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள கங்கணா அத்துடன் சிறு குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''குழந்தையாக இருந்தபோது மற்ற குழந்தைகளுடன் விளையாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. என்னுடைய பொம்மைகளுக்கு ஆடை அலங்காரங்கள் செய்வது மட்டுமே அப்போது எனக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. நீண்ட நேரத்துக்கு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருப்பேன். அதன் விளைவே இந்த முதிர்ந்த கண்கள். துரதிர்ஷ்டவசமாக, பிறக்கும்போதே சிலர் முதிர்ச்சியுடன் பிறக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருத்தி''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE