இறுதிக் கட்டத்தில் 'அருண் விஜய் 31' படப்பிடிப்பு: கேமராவைப் பார்த்து உருகிய இயக்குநர் அறிவழகன் 

அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி இயக்குநர் அறிவழகன் கேமராவுக்கு உருக்கமான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய்யும், அறிவழகனும் மீண்டும் இணைகின்றனர். கரோனா நெருக்கடியால் தடைப்பட்டிருந்த இந்தப் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்கு 'ஜிந்தாபாத்', 'பார்டர்' உள்ளிட்ட பெயர்கள் சொல்லப்பட்டாலும் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. 'அருண் விஜய்' 31 என்றே இந்தப் படம் அழைக்கப்பட்டு வருகிறது. ரெஜினா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதையொட்டி, இயக்குநர் அறிவழகன், கேமரா கருவியின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, உருக்கமான குறிப்பை எழுதியுள்ளார்.

"பல நாட்களாக உன்னைப் பார்க்க ஏங்கி இன்று உன்னைப் பார்க்கிறேன். ஆம்! காலம் நம் இருவரையும் அவ்வப்போது பிரிக்கிறது. உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை அது அதிகரிக்கிறது. ஆனால் உன் மீதான என் அன்பு என்றும் நீடிக்கும். ஏனென்றால் நான் யார், நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதைக் காட்டியது நீதான். அதிக அன்புடன் எனது தாகம் தொடர்கிறது" என்று அறிவழகன் பகிர்ந்துள்ளார்.

இன்னொரு பக்கம், "ஆக்‌ஷன் நிறைந்த கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கடுமையாக உடற்பயிற்சி செய்தேன். இந்த அற்புதமான குழுவுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் தனித்துவமான அனுபவத்தைத் தர நாங்கள் அனைவரும் முழு உழைப்பையும் தருகிறோம்" என அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE