இந்தி சின்னத்திரையில் பிரபல நடிகையான திவ்யா பட்னாகர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 34.
'யே ரிஷ்தா க்யா கேலதா ஹாய்', 'ஸன்ஸ்கார்', 'உதான்', 'ஜீத் கயீ தோ பியா மோரே' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருப்பவர் திவ்யா பட்னாகர். இவர் ஏற்கெனவே அதிக ரத்த அழுத்தப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.
'தேரா யார் ஹூன் மெய்ன்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருக்கும்போது திவ்யாவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே உடலில் பிரச்சினைகள் இருந்ததால் அவரது உடல்நிலை வேகமாக மோசமானது. செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் மும்பையின் செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) திவ்யா உயிரிழந்தார்.
கடந்த வாரம்தான் திவ்யாவின் உடல்நிலை மோசமானதைக் கேள்விப்பட்டு அவரது தாயும், சகோதரரும் திவ்யாவைப் பார்க்க டெல்லியிலிருந்து மும்பை வந்தனர்.
» டிக் டாக்கில் சந்தித்த நபர் துன்புறுத்தல்: தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை
» இந்தி சின்னத்திரை படப்பிடிப்பில் கரோனா தொற்று: 7 பேர் பாதிப்பு
திவ்யாவின் மறைவுக்கு அவருடன் நடித்த பல மூத்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் திவ்யா திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணம் முறிந்ததால் தனியாக வசித்து வந்த அவர் மன அழுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.