விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட்: கங்கனாவை சாடிய பாடகர் மிகா சிங்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பில்கிஸ் பனோ என்ற 86 வயது மூதாட்டியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் ஆவார்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ரூ.100 கொடுத்தால் மூதாட்டி பில்கிஸ் பனோ எந்தப் போராட்டத்திலும் பங்கேற்பார்” என பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்த மூதாட்டிக்கு பதில் வேறு ஒருவரின் புகைப்படத்தை கங்கனா பதிவிட்டிருந்தார். அதுவும் இணையத்தில் சர்ச்சையானது. கங்கணாவின் கருத்துக்கு பஞ்சாபைச் சேர்ந்த பாடகரும் நடிகருமான திலிஜித் தோசான்ஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கங்கனாவுக்கும் அவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் முற்றியது.

இந்த சூழலில் திலிஜித்தைத் தொடர்ந்து பாடகர் மிகா சிங்கும் தற்போது கங்கனாவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து மிகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நடிகை கங்கனா மீது அதீத மதிப்பு வைத்திருந்தேன். அவரது அலுவலகம் இடிக்கப்பட்ட போது கூட அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தேன். ஆனால் அது தவறு என்று இப்போது புரிகிறது. ஒரு பெண்ணாக அந்த வயதான பெண்மணியை நீங்கள் மதித்திருக்க வேண்டும். நீங்கள் நியாயமானவராக இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்.

என்னுடைய அனைத்து பஞ்சாபி சகோதரர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நமது கவனம் கங்கனா விவகாரத்தின் மீது இருக்க கூடாது. எனக்கு கங்கனாவுடன் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்ல. அவர் செய்த தவறுக்கான எதிர்வினைய எதிர்கொள்கிறார். மன்னிப்புக் கேட்கவில்லையென்றாலும் தனது ட்வீட்டை அழித்து விட்டார்.

இவ்வாறு மிகா சிங் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE