‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - தயாரிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்

By ஐஏஎன்எஸ்

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது.

ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் சிறந்த தொடரருக்கான எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.

இத்தொடரை ஒவ்வொரு எபிசோடுகள் வீதம் ஆலன் டைலர், டேவிட் பெனியாஃப், டி.பி. வெய்ஸ் உள்ளிட்ட 15 பேர் இயக்கியிருந்தனர்.

இத்தொடருக்கு முந்தைய கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாக எச்பிஓ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. தற்போது இத்தொடரின் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது.

இதை 10 எபிசோட்களாக எடுக்க எச்பிஓ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தொடரை 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் சில எபிசோட்களை இயக்கிய ரயான் கோன்டால், மிக்யுல் ஸ்போச்னிக், உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் தயாரிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக நேற்று (06.12.20) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இத்துடன் இத்தொடருக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஹெச்பிஓ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE